"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடன், மக்கள் நலன் ஒன்றையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெருந்திரளான ஆண்களும், பெண்களும் சோகமே உருவாக, நினைவிடத்தில் திரண்டு, தமிழகத்தின் தன்னிகரில்லா தாய்க்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்திய துணைக் கண்டத்தின் ஈடு இணையற்ற அரசியல் தலைவரும், தமிழக மக்கள் மற்றும் உலகெலாம் பரவி வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமுமாகிய, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நேற்று மாலை, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர்களின் பீரங்கிக் குண்டுகள் முழங்க, முதலமைச்சரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக ஆளுநர் திரு.வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் திரு.ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முப்படை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். லட்சோபலட்சம் அ.இஅ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதவாறு, தமிழகத்தின் தாய்க்கு பிரியா விடை கொடுத்தனர்.
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர், சென்னை மெரினா கடற்கரையில் குவியத் தொடங்கினர். அ.இ.அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
கூட்டம் கூட்டமாக நினைவிடத்தில் குவியும் மக்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்து, அரும்பணியாற்றி வந்ததை, நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கண்ணீர் வடிக்கின்றனர். நினைவிடத்தில் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொலைதூரத்தில் இருந்து நேற்று சென்னைக்கு வர இயலாதவர்கள், கடற்கரைக்கு இன்று வந்து, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர், உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர், மலேசியா வாழ் தமிழர்களும் முதலமைச்சரின் நினைவிடத்தில் கூடி தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.
ஆண்கள் ஏராளமானோர்மொட்டை அடித்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் ஏராளமான பெண்களும், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நினைவுகளை நெஞ்சில் தாங்கி, மொட்டை அடித்துக்கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர், இன்று, தலைமைச் செயலகத்தில் இருந்து, மெரினா கடற்கரைக்கு அமைதிப் பேரணியாக வந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில், மலர்வளையம் வைத்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
அஸாம் மாநில விவசாயத் துறை அமைச்சர் திரு.அதுல் போரா, நீர்வளத்துறை அமைச்சர் திரு.கேஷப் மகந்தா ஆகியோர், சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று வந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, அஸாம் மாநில அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் உள்ளுறை ஆணையர், சென்னை வந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஈழ ஏதிலிய மறுவாழ்வு கழகத்தின் தலைவர் திரு.சந்திரஹாசன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நலனுக்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், மெரினா கடற்கரைக்கு அணி அணியாக திரண்டு வந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.