தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட ஏதுவாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் இதர பகுதிகளில் இருந்து மொத்தம் 11 ஆயிரத்து 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று 3 ஆயிரத்து 979 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே நூறடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, சங்கானாச்சேரி, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் 7 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 240 பேருந்துகள் என மொத்தம் 720 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகின்றன. இங்கிருந்து மொத்தம் 574 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல, தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் 653 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் ஆயிரத்து 390 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து ஊர்திரும்பும் வகையில், வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் இதே எண்ணிக்கையில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பேருந்துகள் இயக்கம் மற்றும் பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.