தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
Sep 29 2016 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளத்திற்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து அடுத்த மாதம் 28ம் தேதி இரவு 9 மணிக்கு நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், 29ம் தேதி காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து அக்டோபர் 30ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை சிறப்பு ரயில் சென்னை வந்தடைகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 27ம் தேதி இரவு 8.15 மணிக்கு நெல்லைக்கும், நெல்லையில் இருந்து 28ம் தேதி மாலை 3 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து 28ம் தேதி இரவு 10.30 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து 30ம் தேதி புறப்பட்டு மறுநாள் சிறப்பு ரயில் சென்னை வந்தடைகிறது.
எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, 27ம் தேதி இரவு 8.15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்படுகிறது. வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு 28ம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. இதற்காக தெற்கு ரயில்வே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.