சென்னை மாநகராட்சியில் நவீன பணிகள், துறைதோறும் சீரமைப்பு என 200க்கும் மேற்பட்ட பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் : முதலமைச்சரின் நடவடிக்கையால்தான், மெட்ரோ ரயில் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Jul 30 2016 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநகராட்சியில் நவீன பணிகள், துறைதோறும் சீரமைப்பு என 200க்கும் மேற்பட்ட பணிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் நடவடிக்கையால்தான், மெட்ரோ ரயில் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் திரு.சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், சென்னை மாநகரம் தன்னிறைவுடன் நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சீரிய பொருளாதாரத்தைக் கொண்ட உலகத் தரம்வாய்ந்த வணிக நகரமாக மாற்றப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகரின் மிகப்பெரிய போக்குவரத்து கட்டமைப்பாக சென்னை மெட்ரோ ரயிலை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இத்திட்டத்திற்கு வித்திட்டவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 114 புள்ளி ஒன்பது ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 பாலப் பணிகள் முடிக்கப்பட்டு திறந்துவிடப்பட்டுள்ளன. தற்போது 21 புள்ளி ஒன்று ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக வரும் ஏழை-எளிய நோயாளிகளின் உதவிக்காக வரும் உறவினர்கள் தங்க வசதியாக, 6 பெரிய அரசு மருத்துவமனைகளில் 12 காப்பகங்கள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.