முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் ஆற்றல்மிகு நிர்வாகத்தால், தமிழகத்தில் வரி வசூல் வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கை மீது 2-வது நாளாக பொது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இடையே குறுக்கிட்டுப் பேசிய, நிதியமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் செயல்திறனும், ஆற்றலும் மிக்க நிர்வாகத்தால், வரி வசூல் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால்தான் பிரபல தொழில் நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேறியதாக அமைச்சர் திரு. P. தங்கமணி குற்றம் சாட்டினார்.
தி.மு.க. ஆட்சியின்போது, மூடப்பட்ட தொழில் நிறுவனத்தை சீரமைத்து மீண்டும் திறக்கவும், புதிய தொழில்களை தமிழகத்தில் பெருமளவில் ஏற்படுத்தவும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் திரு. M.C. சம்பத் எடுத்துக்கூறினார்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற, குறிப்பாக மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் திரு. S.P. வேலுமணி தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வசதிக்காக யாத்திரிகா நிவாஸ் மற்றும் சிறப்பு சட்டக்கல்வி வழங்க தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா சிறப்பாக நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் திரு. வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் ஆயிரத்து 808 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், 16 லட்சத்து 22 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு. ஆர். காமராஜ் தெரிவித்தார்.
பட்டு நெசவாளர்களின் நலன்காக்க, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஆணைப்படி, காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுப் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் திரு. ஓ.எஸ் மணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளைப் பெருக்க, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாக அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபில் தெரிவித்தார்.