முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்த கழக வேட்பாளர்கள், தங்கள் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வியத்தகு வெற்றியை வழங்கியுள்ள தமிழக மக்களின் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழக மக்கள் தமது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் தமது நன்றியை உரித்தாக்கிக் கொள்வதாகவும், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும், வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் கழக வேட்பாளர்கள், தங்கள் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கஸ்தூரி வாசு, கழக நிர்வாகிகள், கோட்டூர், அங்கலகுறிச்சி, சங்கம்பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அ.இ.அ.தி.மு.கவின் தோழமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. உ. தனியரசு மற்றும் கழக நிர்வாகிகள், சக்கர்பாளையம், புதுப்பாளையம், சேரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைநேரில் சந்தித்து மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு. P.V. பாரதி, கொள்ளிடம் ஒன்றியத்தில், அரசூர், குன்னம், மாதிரிவேளுர், கீழ்மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கழக தோழமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர், திரு. தமிமுன் அன்சாரி, திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். கழக நடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ராமு, ஜக்கநாரை, அரவேனு, தும்பூர் உள்ளிட்ட பகுதிகளில், கழக நிர்வாகிகளுடன் சென்று, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பெருமாள்நகர் கே. இராஜன், மற்றும் கழக நிர்வாகிகள், பஜார் வீதி, திருமஞ்சன கோபுரவீதி உள்ளிட்ட இடங்களில், பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தொகுதி அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஜெயந்தி பத்மநாபன், நெல்லூர் பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காட்பாடி தொகுதியில், வெற்றி வாய்ப்பை இழந்த அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு. S.R.K. அப்பு மற்றும் கழக நிர்வாகிகள், மதிநகர், ராதாகிருஷ்ணன் நகர், கல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் நன்றி தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், வெற்றி வாய்ப்பை இழந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களும் தத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.