கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் : கர்நாடகா - தமிழக எல்லையில் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
May 25 2016 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவியதையடுத்து, கர்நாடகா - தமிழக எல்லையில் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவியதையடுத்து, தமிழகத்தில் பரவாமல் தடுக்க கால்நடைத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான கக்கநல்லா எல்லையிலும், தமிழக-கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்டவயல், தாளூர், அய்யன்கொல்லி, நம்பியார்குண்ணு போன்ற பகுதிகளிலும் அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து தமிழக பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வாகனங்களில், கோழிகள், வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் ஏதேனும் கொண்டு வரப்படும் பட்சத்தில், அதனை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். லாரிகள் மட்டுமின்றி, நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களும், தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.