முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீர்மிகு நடவடிக்கைகளால், கோவை உக்கடத்தில் உள்ள பெரியகுளம் சீரமைக்கப்பட்டு அப்பகுதியின் அடையாளமாக திகழ்கிறது : குளத்தைச் சுற்றிலும் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைத்துக்கொடுத்த முதலமைச்சருக்கு, பொதுமக்கள் நன்றி - பாராட்டு
May 1 2016 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட சீர்மிகு நடவடிக்கைகளால், கோவை உக்கடத்தில் உள்ள பெரியகுளம் சீரமைக்கப்பட்டு அப்பகுதியின் அடையாளமாக திகழ்கிறது. இக்குளத்தைச் சுற்றிலும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் சூரிய ஒளி மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைத்துக்கொடுத்த முதலமைச்சருக்கு, பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
"நீர்இன்று அமையாது உலகு" என்ற குறளுக்கு ஏற்ப முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு எண்ணற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குளங்களை சீரமைத்தல், ஏரிகளை தூர்வாருதல், பண்ணை குட்டைகள் அமைத்தல், புதிய தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட சிறப்பான நடவடிக்கைகளால், மழை நீர் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால், வளம் செழிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்களை தூர்வாரி சீரமைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழக - கேரள மாநிலங்களின் நுழைவாயிலாக விளங்கும் உக்கடம் பெரியகுளம் தூர்வாரப்பட்டு நவீன முறையில் கரைகள் பலப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளத்தைச் சுற்றிலும் சூரிய ஒளி மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதையும், வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இத்தகைய சீர்மிகு நடவடிக்கைகளால், உக்கடம் பெரியகுளம், அப்பகுதியின் அடையாளமாகத் திகழ்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள பொதுமக்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
உக்கடம் பெரிய குளத்தைப் போன்று, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வல்லான்குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட 8 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தற்போது கோவை மாநகரின் நீர் ஆதாரமாக இக்குளங்கள் உருவாகியுள்ளன.