தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மென்மேலும் துரிதப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஆணைப்படி நிவாரண உதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மழைக்கால தொற்று நோய் பரவாமல் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கிய மழைநீர், உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இப்பணியை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். திரு.வி.க. குடியிருப்பு, கிரியப்பா சாலை, விஜயராகவா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நவீன இயந்திரங்களைக் கொண்டு, மழைநீர் அகற்றும் பணிகளை, அமைச்சர் திருமதி. பா.வளர்மதி பார்வையிட்டார்.
தொடர் மழையால் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலும், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை அமைச்சர் திருமதி. எஸ். கோகுல இந்திரா மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகள் பார்வையிட்டு விரைவுப்படுத்தினர்.
சென்னை ஆலந்தூர் பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், 8 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 வேளையும் உணவு, குழந்தைகளுக்கு ரொட்டி, பால் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மழைக்கால நோய்களை தடுக்கும் வகையில், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதுடன், நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை, நிவாரண ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் க. மணிவாசன் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை தண்டையார்பேட்டையை அடுத்த கண்ணன் நகர் பகுதியில், கனமழை காரணமாக தேங்கியிருந்த மழைநீர் ராட்சத மோட்டார் இயந்திரம் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டது.
புதுவண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் நவீன எந்திரங்கள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது.
வ.உ.சி. நகர் 26-வது குறுக்குத் தெரு பகுதியில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் போர்க்கால அடிப்படையில் அகற்றினர்.
கனமழையால், பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட நீர் அடைப்பை மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்கள் கொண்டு சரிசெய்தனர்.
இதேபோன்று, அடையாறு மற்றும் காந்திநகர் கழிவு நீரேற்று நிலையத்தில் மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கோடம்பாக்கம் பாலத்தை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணம், சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், திரு. ஆர். வைத்திலிங்கம், திருமதி. பா. வளர்மதி, திருமதி. எஸ். கோகுல இந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி, மாவட்ட ஆட்சியர் திருமதி. சுந்தரவல்லி, மாநகராட்சி ஆணையர் திரு. விக்ரம் கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், கடலூர் நகரின் தாழ்வான பகுதிகளான கோண்டூர், ராம் நகர், கேசவன் நகர், பீமாராவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்தவர்கள் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், உடைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இப்பணிகளை அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
கனமழையால் சேதமடைந்த திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் பாலம், கனகம்மா சத்திரம் - தக்கோலம் இடையிலான முத்துகொண்டாபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பாலங்கள் மற்றும் சாலைகளை உடனடியாக சீரமைப்பது குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் திரு. எடப்பாடி கே பழனிசாமி, திரு.B.V. ரமணா மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மணலி பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 27 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளும், உயிரிழந்த 4 கறவை மாடுகளுக்கு தலா 30 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை, பிரத்யேக மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியைஅமைச்சர் திரு. S.P. சண்முகநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்திற்குட்பட்ட புளியம்பட்டி, மோட்டுப்பட்டி, கமலாபுரம் ஆகிய கிராமங்களில், மழையால் சேதமடைந்த தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 11 ஒன்றியங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, சூரைக்காடு என்ற இடத்தில், சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி, பலத்த மழை காரணமாக சேதமடைந்த நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், இந்தப் பாலம் விரைவாக சீரமைக்கப்பட்டு இன்று போக்குவரத்து தொடங்கியது.