தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வேண்டுகோளின் படி பார்வையிட்டு வரும் மத்திய குழுவினர் இன்று மூன்றாவது நாளாக வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் கடலூர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில், உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களை விரைந்து சீரமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இப்பணிகளுக்கென உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வெள்ள சேதங்களை முழுமையாக சீரமைக்க, முதற்கட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் 8,481 கோடி ரூபாய் தேவை என்றும், உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, முதற்கட்டமாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கோரிக்கை விடுத்தபடி, வெள்ளச்சேத பகுதிகளைப் பார்வையிட, தமிழகத்திற்கு மத்தியக்குழு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. உள்துறை இணைச் செயலாளர் திரு. T.V.S.N. பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட ஆய்வுக்குழு, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரை சந்தித்தது. வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்தியக் குழுவை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளச் சேத பகுதிகளை பார்வையிட்ட மத்தியக் குழு, மூன்றாவது நாளாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சேணியம்மன் கோயில் தெரு தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்த மத்தியக்குழு, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தது.
மழை வெள்ள நீர் அகற்றம் - அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த புகைப்படங்களை மத்தியக்குழு பார்வையிட்டது. மேலும், தண்டையார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மத்தியக் குழு, உணவு தயாரிப்பு முறைகளைக் கேட்டறிந்தது. அங்கு வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு குடிநீரை மத்தியக்குழுவினர் ஆர்வத்துடன் வாங்கி அருந்தினர்.
அதனைத் தொடர்ந்து, கைலாசன் தெரு, இளைய தெரு உள்ளிட்ட இடங்களில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், அங்குள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி அமைக்கப்பட்டிருந்த நடமாடும் மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்த மத்தியக் குழு, கார்கில் நகர், சதையான் குப்பம், தட்டாமாஞ்சில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுத் தலைவர் திரு. T.V.S.N.பிரசாத், தங்களது ஆய்வறிக்கையை ஒரே வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்போவதாக தெரிவித்தார்.