விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் திரு. குருசாமி என்பவரின் மகன் தங்கப்பாண்டி மற்றும் திரு. பழனிச்சாமி என்பவரின் மகன் பெத்துராஜ் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், அடங்கார்குளம் கிராம உதவியாளர் திரு. அருள்லிங்கம் மற்றும் செட்டிக்குளம் கிராம உதவியாளர் திரு. வேலு ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி கூடங்குளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரத்தைச் சேர்ந்த திரு. சங்கர் என்பவரின் மனைவி திருமதி கிருஷ்ணவேணி கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி நகரத்தில், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழாவிற்காகப் போடப்பட்டிருந்த மேடை மழையின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சரிந்து விழுந்ததில் தரங்கம்பாடி வட்டம், பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சூரியமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், மேல்மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தனிஸ்லாஸ் என்பவரின் மகன் திரு. பெர்க்மான்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி விசைப்படகின் ஆங்கரை இழுத்து தூக்கும்போது நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. அந்தோணிமுத்து என்பவரின் மகன் திரு. செல்வராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி திருச்செந்தூர் வட்டம், புன்னக்காயல் கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பொங்கியம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பிரதாப் என்பவரின் மகன் செல்வன் ஹரீஷ் மற்றும் திரு. ராமச்சந்திரன் என்பவரின் மகன் செல்வன் நந்தீஷ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி திட்டக்குடி எல்லைக்கருகே பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு கிராமம் அருகே வெள்ளாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், பெருங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னபையன் என்பவரின் மகன் திரு. ஏழுமலை கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆந்திர மாநிலம், சென்னா நதியை கடக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.