முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் துணை மேற்பார்வைக் குழு இன்று 2-வது நாளாக ஆய்வு - மூவர் குழுவினர் நாளை நேரில் ஆய்வு
Nov 29 2015 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து உள்ளிட்டவை குறித்து துணை மேற்பார்வைக்குழுவினர் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. இதையடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நீண்ட சட்டப்போராட்டங்களின் விளைவாக, அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர் நடவடிக்கையால், மதகுகள் இறக்கப்பட்டு, அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்ய, மேற்பார்வைக் குழுவும், துணை மேற்பார்வைக்குழுவும் அமைக்கப்பட்டன.
அண்மையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்த நிலையில், பிரதான அணை, சிற்றணை, 13 மதகுகள் பகுதி, சுரங்கப்பகுதிகள் ஆகிய இடங்களில் நீர் அழுத்தம், மழையளவு உள்ளிட்டவை குறித்து 5 பேர் கொண்ட துணை மேற்பார்வைக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இக்குழுவினர் 2-வது நாளாக இன்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நாளை, மூவர் அடங்கிய மேற்பார்வைக்குழு முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தவுள்ளது.