வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன
Oct 9 2015 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் 18 வயது பூர்த்தியாகும் வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயிரத்து 123 வாக்குச் சாவடிகளில், நாளை மறுநாள் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. புதிதாக பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலிருந்து, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பேரணியை சார் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளூரில் துவங்கிய இந்தப் பேரணி, ஆவடியில் நிறைவடைந்தது.
கடலூர் மாவட்டத்தில், வாக்காளர் விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊர்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகரின் திண்டிவனம் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகிலிருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.