வருவாய்த் துறையின் சேவை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் மேலும் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
Aug 31 2015 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், வருவாய்த்துறையின் சேவைகள் மக்களை விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், வருவாய்த்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமது தலைமையிலான அரசின் மேலும் ஒரு நடவடிக்கையாக, 17 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 5 புதிய வருவாய்க் கோட்டங்கள் மற்றும் 16 புதிய வருவாய் வட்டங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். இதன்மூலம் வருவாய்த்துறையினரின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, பேரவை விதி எண் 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 4 புதிய வருவாய்க் கோட்டங்களும், 49 புதிய வருவாய் வட்டங்களும், 59 குறு வட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் பல்வேறு வட்டங்களை சீரமைத்து, 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 புதிய வருவாய் கோட்டங்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம், தமிழகத்தில் செயல்பட்டு வரும் வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை 285 ஆக அதிகரிக்கும் என்றும், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 85 ஆக உயரும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.