பள்ளி படிப்பு முதல் பொறியியல் படிப்புவரை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடமிருந்து கல்வி உதவித்தொகைப் பெற்ற கூலித் தொழிலாளியின் மகன், தற்போது இந்திய வருவாய்த்துறைப் பணிக்கு தேர்வாகியுள்ளார். தனது வெற்றியை முதலமைச்சருக்கு அர்ப்பணிப்பதாகவும், முதலமைச்சர் உதவி செய்திராவிட்டால், இந்த நிலைமைக்கு தான் வந்திருக்க முடியாது என்றும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி மயிலாம்பாடி கிராமம் அருகேயுள்ள காந்தி நகரைச் சேர்ந்த செல்வன் - பாப்பா கூலித்தொழிலாளி தம்பதியரின் மகன் சரவணன், 2005-ம் ஆண்டு, 10-ம் வகுப்புத் தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று, ஆதிதிராவிடருக்கான ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா, அதிக மதிப்பெண்கள் பெற்ற சரவணனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
ஆனால், வறுமையும், குடும்பச்சூழலும், சரவணன் மேல்படிப்பினை தொடரவிடாமல் தடுத்தது. அப்போது, நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தை கிழித்து, மேல்படிப்புக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். துண்டு காகிதத்தில் எழுதப்பட்ட போதிலும், சரவணனின் வேண்டுகோளை பரிசீலித்து, அவர் மேல்படிப்புத் தொடரவும், பொறியியல் பட்டம் பெறவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆண்டுதோறும் சரவணனை நேரில் அழைத்து கல்வி உதவித்தொகை வழங்கிவந்தார்.
ஆண்டுகள் கடந்தாலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உதவி வழங்கிட ஒருபோதும் தவறியதில்லை. தற்போது இந்திய வருவாய்த்துறைப் பணி ஒதுக்கீடு பெற்றுள்ளதாகவும், தனது உயர்வுக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தன்னுடைய வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ள சரவணன், முதலமைச்சர் உதவி செய்திராவிட்டால், இந்த நிலைமைக்கு தான் வந்திருக்க முடியாது என்றும் உருக்கமாக குறிப்பிட்டார்.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது" என்பது வள்ளுவன் வாக்கு. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிட பெரியதாகக் கருதப்படும். அந்த வகையில், பள்ளி மேற்படிப்பு தொடர முடியாத ஒருவருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மனிதாபிமானத்தோடு செய்த உதவி, இந்திய வருவாய்த்துறை பணி ஒதுக்கீடு பெறும் அளவுக்கு சரவணனை இன்றைக்கு உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.