புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி 16 நாட்களாக வேலைநிறுத்தம் : சுரங்கம் 1-ல் என்.எல்.சி. நிரந்தர ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது
Aug 4 2015 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி 16 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி. நிரந்தர ஊழியர்கள், இன்று சுரங்கம் 1-ல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.
புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி என்.எல்.சி. தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 20-ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. சென்னையில், மீண்டும் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், என்.எல்.சி. நிர்வாக பிரதிநிதிகள் கலந்து கொள்ளாததால், நாளைக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஊழியர்கள் Q பாலம் அருகேயிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சுரங்கம்-1-ஐ முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 16-வது நாளாக நடைபெறும் என்.எல்.சி. நிரந்தர ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளும், கரியை அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.