சொத்துகுவிப்பு வழக்கில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு குற்றப்பத்திரிகை வழங்கல் - செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத கவுதம சிகாமணிக்கு நீதிபதி எச்சரிக்கை
Aug 4 2015 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, சொத்துகுவிப்பில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. செம்மண் குவாரி வழக்கில் ஆஜராகாத அவரது மகன் கவுதம சிகாமணிக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அதிகார துஷ்பிரயோகம் செய்து சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார், பொன்முடிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு நீதிபதி திரு. சுந்தரமூர்த்தி உத்தரவின் பேரில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கு விசாரணை, வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், அதிகாரத்தை பயன்படுத்தி, செம்மண் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில், பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி திரு. சுந்தரமூர்த்தி வரும் செப்டம்பர் 12-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தார். அன்று அனைவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.