அ.இ.அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருவதைப் பொறுக்க முடியாமல், மதுவிலக்கு என்ற ஆயுதத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு தமிழக அரசு கடும் கண்டனம்

Aug 4 2015 5:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு நிகழ்த்தி வரும் சாதனைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக, அ.இ.அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருவதைப் பொறுக்க முடியாமல், அரசுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன், மதுவிலக்கு என்ற ஆயுதத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதுவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தி.மு.க., தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாத பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், மதுவின் துணைகொண்டு மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் உதிரிக் கட்சிகள், இன்று "பந்த்" நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை வரையறைக்கு உட்பட்டது; வன்முறைப் போராட்டங்கள் மூலம் அரசின் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். எனவேதான் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், முழு மதுவிலக்கை உடனடியாக அமல் படுத்த முடியாது என்றும், இதே தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்;

அப்படி எனில் பந்த் போன்ற போராட்டங்கள் மதுவிலக்கிற்காக நடத்தபடுபவை அல்ல என்பது தெள்ளத் தெளிவாகிறது - அரசியல் ஆதாயங்களுக்காகதான் தற்போது மதுவிலக்கு பற்றி பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றன - கடந்த ஜூலை 31 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை சந்திப்பில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கடையை அகற்றுவது தொடர்பாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த காவல் துறையிடம் மதுவிற்கு எதிரான மக்கள் இயக்கம் அனுமதி கேட்டு, அந்த மனு காவல் துறையினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவருமான திரு. ஜெயசீலன் மற்றும் திரு. சசிபெருமாள் ஆகியோர் உண்ணாமலைக்கடை சந்திப்பில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் தனியார் தோட்டத்தில்அமைந்துள்ள 130 அடி உயர அலைபேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர்.

அங்கு கூடியிருந்த மக்களிடம் சம்பந்தப்பட்ட கடை 7 நாட்களுக்குள் மாற்றப்பட்டு விடும் என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை டாஸ்மாக் மேலாளர் அளித்துள்ளார் - 40 அடி உயரம் வரை சென்ற திரு. ஜெயசீலன் கீழே இறங்கிவிட்டார். திரு. சசிபெருமாளை கீழே இறக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது, அங்கே அவர் நினைவில்லாமல் இருந்தது தெரிய வந்தது - திரு. சசிபெருமாளை கீழே இறக்கி குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்;

திரு. சசிபெருமாள் ஏற்கெனவே இறந்து விட்டதாக அங்குள்ள மருத்துவ அதிகாரி தெரிவித்ததையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவமனைக்கு திரு. சசிபெருமாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது - திரு. சசிபெருமாளின் மரணம் வருத்தத்திற்குரியது, வேதனை அளிக்கிறது, துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அவர் நடத்திய போராட்டம் காந்திய வழியில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது - அஹிம்சை வழியிலான போராட்டங்கள் மட்டுமே ஒரு குறிக்கோளை அடைய வழிவகுக்கும்;

இதைத்தான் மகாத்மா காந்தி அவர்கள் கடைபிடித்தார் - ஆனால், தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு, கோபுரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்துவது காந்திய வழிமுறையா? இதைத்தான், தினமணி நாளிதழும் தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும், தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி என்று கேள்வி எழுப்பியுள்ளது;

60 வயதான சசிபெருமாள் 175 அடி உயர செல்லிடப்பேசி கோபுரத்தின் உச்சியில் கடும் வெயிலில் 5 மணி நேரம் அமர்ந்து நடத்திய போராட்டம் அறப்போராட்டம் அல்ல - காந்திய வழிமுறையும் அல்ல - மதுவிலக்கு வேண்டும் என்பதில் உறுதுணையாக இருந்த மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால் சசிபெருமாள் செயலை நிச்சயம் ஆமோதித்திருக்க மாட்டார் - கண்டனம் தெரிவித்திருப்பார் - போராட்டம் என்பது வெறியாக மாறிவிடக்கூடாது - காந்திய வாதியாக அறப்போராட்டம் நடத்தி வந்த சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம் என்று தினமணி நாளிதழ் தெரிவித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத்தக்கதும், கண்டனத்துக்குரியதும் ஆகும். தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த மதுவிலக்கை 1971ம் ஆண்டு ரத்து செய்து அதன்மூலம் மதுவின் கொடிய பழக்கத்திற்கு தமிழக மக்களை ஆட்படுத்திய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போது மதுவிலக்கு பற்றி பேசுவது வேடிக்கையானதும், விநோதமானதும் ஆகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதுவிலக்கு பற்றி பல எதிர்க்கட்சிகள் பேசுவதைப் பார்த்து தானும் இதில் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் தற்போது கருணாநிதி மதுவிலக்கு குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். ஆட்சிக்கட்டில் கனவில் உள்ள கருணாநிதி தான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பூசி மெழுகி பின்னர் தற்போது முழுமதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என வரும் 10ம் தேதி தி.மு.க. சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சொல்வது அரசியல் ஆதாயம் தேடுவது அல்லாமல் வேறு என்ன என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1971ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி, கொட்டும் மழையில் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்ட போதும், அதை எடுத்தெறிந்து மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச ஏதேனும் அருகதை உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தி.மு.க.வைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவருக்கு வேண்டிய இருவர் உள்ளிட்ட 5 நபர்களுக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச என்ன யோக்யதை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் இருந்து மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என அவ்வப்போது வாக்குறுதியை அளித்து அவற்றை காற்றில் பறக்கவிட்டு மக்களை ஏமாற்றிய கருணாநிதி, இப்போது, மதுவிலக்கைப் பற்றி பேசுவது அரசியல் ஆதாயத்திற்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்;

அரசியல் லாபத்திற்காகத்தான் மதுவிலக்கைப் பற்றி அரசியல் கட்சிகள் பேசியதாக சில நாட்களுக்கு முன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் தெரிவித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது;

திரு. தொல். திருமாவளவன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ''மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக மேலெழுந்திருக்கிறது - மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் லாபம் அடையலாம் என்று எண்ணும் சிலர் மதுவிலக்கு மாவீரர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்தானா என்ற ஐயம் நமக்கு எழுகிறது" என்று கூறி இருக்கிறார்;

மேலும், ''மீண்டும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது இருக்கும் அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, முன்பைவிட இன்னும் தீவிரமாக கள்ளச்சாராயத் தொழிலில் அவர்கள் ஈடுபடக்கூடும்'' என்றும் திரு. தொல். திருமாவளவன் கூறியுள்ளார் - அதே திரு. தொல். திருமாவளவன், தற்போது மதுவிலக்கை வற்புறுத்தி கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக என்பதை அவர்தான் விளக்க வேண்டும்;

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவதற்கான ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்;

இதே திருமதி தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய புதிய மதுக்கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டுவரும் என்று பேசியதற்கு பதில் அளித்துள்ளார் - அதில், ''இந்த புதிய மதுக்கொள்கையைக் கொண்டுவருவோம் என ராகுல் பேசியுள்ளார்.

அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், அப்படிப்பட்ட மதுக்கொள்கையை ஏன் கொண்டுவரவில்லை என்று வினவியிருக்கிறார் - அவரது கருத்து சரியானதுதான் - அவர் கூறிய அதே வார்த்தைகள், பாரதிய ஜனதாவுக்கும், திருமதி தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் நீங்கலாக, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள ஏனைய மாநிலங்களில் முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுத்த பின்னர், தமிழகத்தில் மதுவிலக்கு பற்றி திருமதி தமிழிசை சவுந்தரராஜன் பேசட்டும் - பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கூட, மதுபானம் கள்ளச்சந்தையில் அதிக அளவில் கிடைக்கிறது என்பது திருமதி தமிழிசைக்குத் தெரியாதா? - அவ்வாறு தெரியவில்லை எனில், 31.8.2014 தேதியிடப்பட்ட The Hindu ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையைப் படித்து தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குஜராத்தில் உருவாக்கப்பட்டு வரும் Gujarat International Finance and Tec City-யில், மதுவிலக்கைத் தளர்த்த குஜராத் அரசு முடிவு எடுக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளனவே! என அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, ஒருபடி மேலே சென்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் - கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி அங்கு ஒரு போராட்டம் நடைபெற்றது - அந்தப் போராட்டத்தில் திரு. வைகோவின் தாயாரும் பங்கேற்றார் - ஆனால், நேற்று திரு. வைகோ முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், திரு. வைகோவின் தாயார் கலந்து கொள்ளவில்லை - அப்படியென்றால், 2-ம் தேதி அன்று வன்முறை வெடிக்கும், மதுபானக் கடை சூரையாடப்படும் என்பதால்தான் தனது தாயாரை கலந்து கொள்ளவேண்டாம் என்று திரு. வைகோ கூறியுள்ளாரா? - திரு. வைகோவின் தாயார் கலந்து கொள்ளாததில் இருந்தே, கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற ஐயம் எழுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலமான 2009-ம் ஆண்டிலிருந்து இதே இடத்தில் செயல்பட்டு வருகிறது - இவ்வளவு காலமாக வாய் திறக்காத திரு. வைகோ, நேற்று போராட்டம் நடத்தியது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காக? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுவைப் போன்று புகையிலையும் தீமை விளைவிக்கும் பொருள்தான் என்பது திரு. வைகோவுக்கு தெரியுமா? தெரியாதா? 2000-ம் ஆண்டிலிருந்து புகையிலைப் பொருட்கள் வாணிபத்தில் ஈடுபட்டு வரும் Tobacco Depot என்ற நிறுவனத்தில் திரு. வைகோவின் புதல்வர் திரு. ஜி. துரை வையாபுரி பங்குதாரராக உள்ளாரே? இதற்கு திரு. வைகோவின் பதில் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுப் பழக்கம் என்பது ஒரு சமூகப் பிரச்னை - எனவேதான் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், முகாம்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு அருகே மதுபானக் கடைகள் இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறானதாகும் - மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன - மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 504 டாஸ்மாக் கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு பற்றி பேசுவதாலும், அதற்கென போராட்டம் நடத்துவதாலும் தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும் - தமிழகம் வளர்ச்சிப் பாதையில், முன்னேற்றப் பாதையில், மனிதவள குறியீட்டில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சமயத்தில், அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்த போராட்டம் நடத்தி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் அமைச்சர் திரு. நத்தம் R. விஸ்வநாதன் தனது அறிக்கையில் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00