தமிழகத்தில், மகளிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பேருந்து நிலையங்களில் "பாலூட்டும் தாய்மார்களுக்கென தனி அறைகள்" மற்றும் "சீர்மிகு தாய்ப்பால் வங்கி" திட்டத்தை தொடங்கி வைத்திருப்பது தாய்மார்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை அவர்கள் மனமார பாராட்டியதுடன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, பேருந்துகளில் பயணம் செய்யும் அன்னையர்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகரப் பேருந்து நிலையங்கள், பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில், பாலூட்டும் தாய்மார்களுக்கு அனைத்து வசதிகளுடன் தனி அறைகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். உலக தாய்ப்பால் ஊட்டும் வாரமான ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சிறப்புற தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தாய்சேய் நல மருத்துவமனையில், "சீர்மிகு தாய்ப்பால் வங்கி" தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அன்னையரை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும் வகையிலும், போதிய அளவு தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும், பாலூட்ட இயலாத வகையில் பாதிக்கப்படும் அன்னையரின் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் வங்கியில் சேகரித்து வைக்கப்படும் பால் வழங்க ஏதுவாக, சீர்மிகு தாய்ப்பால் வங்கிகள் செயல்படுகின்றன.
பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு என்பதை கருத்தில் கொண்டும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், ஊட்டச்சத்திணையும் அளிக்கக்கூடிய தாய்ப்பால் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சீர்மிகு தாய்ப்பால் வங்கி திட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட தேவையான நிதியுதவியையும் ஒதுக்கி, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவெடுக்க வழிவகை செய்துள்ளார்.
தாய்ப்பால் சேகரிப்பு என்பது குறிப்பிட்ட காலக்கட்டங்களில், அன்னையர்களின் விருப்பத்தின்பேரில் மேற்கொள்ளப்படுகிறது. ரத்த வங்கிகளில் பாதுகாத்து வைக்கப்படுவதைப் போல சீர்மிகு தாய்ப்பால் வங்கிகளில் பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு சேகரித்து வைக்கப்படும் தாய்ப்பாலானது, தேவைப்படும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது. தாய்ப்பால் வழங்க முன்வரும் தாய்மார்களுக்கு முன்ஆய்வு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு, பயிற்சி பெற்ற செவிலியர்கள் உதவியுடன் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. பின்னர், தர மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு கிருமிகள் ஏதேனும் இருப்பின், அவை நீக்கப்பட்டு உறைநிலை சேமிப்பு செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. மீண்டும் ஒருமுறை சுத்திகரிக்கப்பட்டு உறைநிலையில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகையில் சேகரிக்கப்படும் தாய்ப்பாலானது, 3 மாதங்கள் வரை வங்கிகளில் வைக்கப்பட்டு சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
சுகாதாரமான முறையில் தாய்ப்பால் வங்கியில் பாதுகாக்கப்பட்ட தாய்ப்பால், உரிய நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டதன் மூலம், குழந்தைகள் உடல் எடை அதிகரித்திருப்பதுடன், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக தாய்மார்கள் தெரிவித்தனர். தாய்ப்பால் வங்கி வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதுடன், "சீர்மிகு தாய்ப்பால் வங்கி" திட்டத்தின் மூலம், குழந்தைகள் பராமரிப்பில் தமிழகம் உலக அளவில் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.