இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், தொலைநோக்குப் பார்வை கொண்ட விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் மறைவு இந்திய திருநாட்டினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு என்ற வாக்கியத்தை இந்திய இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்த டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கைப் பயணத்தை பார்க்கலாம்.
பாம்பன் கடற்கைரையில் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி, ஜெயினுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியின் மகனாக பூமியில் பிறந்தார்.
சிறுவயதிலேயே கல்வியில் ஆர்வம் காட்டிய அவர், சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடையே, அன்புள்ளத்தோடு பழகும் குணம் படைத்தவர்.
தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்த அவர், தமது தாய்மொழியான தமிழின் மகத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துரைத்தவர்.
திருச்சியில் 1954-ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1955-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் படிப்பை, சென்னை எம்.ஐ.டி.யில் பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப்பட்டமும் பெற்றார் அப்துல்கலாம்.
1960-ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் விஞ்ஞானியாக தமது ஆராய்ச்சி வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். இந்திய ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கினார்.
1980-ஆம் ஆண்டு, அப்துல்கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, ரோகிணி-1 என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியதன் மூலம், ராக்கெட் ஏவும் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.
1981-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
1980-1990-களில் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம், கலாம் தலைமையில் வளர்ச்சி பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.
1992, 1999-ம் ஆண்டுகளில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.
1997-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, கலாமுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1998-ம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பொக்ரானில் அணுஆயுத சோதனை கலாம் தலைமையில் நடைபெற்றது.
2002- 2007 இந்தியாவின் 11- வது குடியரசு தலைவராக பதவி வகித்தார்.
அக்னி சிறகுகள், இந்தியா- 2020, எழுச்சி தீபங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்.
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அவர், கனவு காணுங்கள் - அந்த கனவை நனவாக்க பாடுபடுங்கள் என்றுரைத்தவர்.
உயர்ந்த பதவியை வகித்தபோதும், இளைய தலைமுறையினருக்கு உந்து சக்தியாக திகழ்ந்த அப்துல் கலாம், குழந்தைகளின் அறிவுத்திறனை விரிவுப்படுத்த ஊக்கம் அளித்தார்.
இளைஞர்களை கனவு காணுங்கள் என்று சொன்ன அப்துல் கலாம், உறங்கும் போது வருவதல்ல கனவு, நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்று கனவுக்கு புது இலக்கணம் வகுத்தார்.
தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டி, தன் உரையை அமைத்துக் கொள்வார். தனது பொன் மொழிகளாலும், கவிதைகளாலும் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரித்தவர்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தனக்கு ஓய்வு அளித்துக் கொள்ளாத கலாம், நாடு முன்னேற, இளைய தலைமுறையினரை அறிவியல் அறிஞர்களாக ஆக்கும் முயற்சியில் தனது நேரத்தை செலவழித்தார்.
இளைஞர்களுக்கு அறிவியல் உரை என்ற அறிவுரையை ஆற்றிக் கொண்டிருக்கும் போதுதான் அவரை மரணம் தழுவிக் கொண்டுள்ளது. கடின உழைப்பு, அன்பு, அடக்கம் ஆகியவற்றால் தன் மேதா விலாசத்தை மறைத்துக் கொண்ட இந்த மேதையின் மறைவால் நாட்டு மக்கள் வடிக்கும் கண்ணீர், சோகத்தின் சுவடுகளாய் ராமேஸ்வரம் கடலில் சங்கமிக்கிறது.