பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் களைகட்டிய கால்நடை சந்தைகள் : கோடிக்கணக்கில் கால்நடைகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Jan 13 2024 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கால்நடை சந்தைகள் களைகட்டியுள்ளன. கோடிக்கணக்கில் கால்நடைகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் கால்நடை சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஒரு ஆடு 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற மாட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றது. இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி மற்றும் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்தன.
திருச்சி சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். சமயபுரம், மண்ணச்சநல்லூர், கல்லக்குடி, லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உயர்வால் ஏமாற்றத்துடன் வியாபாரிகள் திரும்பி சென்றனர். விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். வடலூர் ஆட்டுச் சந்தையில் கருப்பாடு,கொடி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்காக வந்தன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.