காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை
May 20 2022 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக நீர் வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முதன்மை அருவி, ஐந்தருவி, சினி அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும் 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் இதே நிலையில் உயரும் பட்சத்தில் டெல்டா பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.