ஆந்திராவின் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்ட நீர் திருவள்ளூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது - கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டோடுவதால், கரையை கடக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Oct 19 2021 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் திருவள்ளூர் மாவட்ட எல்லை வந்தடைந்தது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், கரையோர மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வந்தடைந்துள்ளது. இதன் காரணமாக, பள்ளிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சானாகுப்பம், நெடியம், சாமந்தவாடா மற்றும் சொரக்காபேட்டை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் தரைப்பாலத்தைக் கடந்துதான் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், வேலை மற்றும் பள்ளிக்கோ செல்லவும் வேண்டி உள்ளது. அதேநேரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து அடிக்கடி நீர் திறக்கப்படுவதால் தரைப்பாலம் மூழ்கி விடுகிறது. இதனால் மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.