தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
Jul 23 2021 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழையும், ஏனைய மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 25-ம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.