கடற்கரை சார்ந்த பகுதியில் திராட்சை விளைந்த அதிசயம் - தேநீர் கடை உரிமையாளரின் முயற்சிக்கு வெற்றி
May 7 2021 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய திராட்சை கொடியை, கடல் சார்ந்த பகுதியான ராமேஸ்வரத்தில் விளைவித்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தொடர் சாரல் மழை, குளிர் போன்ற பருவநிலைகள் கொண்ட மலைப்பிரதேச அடிவாரங்களில் மட்டுமே விளையக்கூடிய திராட்சைக் கொடி, தற்போது ராமேஸ்வரம் தீவு பகுதியில் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள காமராஜர் நகரில் தேநீர்க்கடை நடத்தி வரும் கணேசன் என்பவர், வீட்டின் பின்புறம் தென்னை மர நிழலில், திராட்சை செடி நட்டு, கால்நடை கழிவுகள், வீட்டின் சமையல் கழிவுகள் போன்ற இயற்கை உரமிட்டு வளர்த்து வருகிறார். தற்போது இந்த திராட்சைக் கொடியில், கொத்து கொத்தாக திராட்சை பழங்கள் விளைந்து இரண்டாவது விளைச்சலுக்கு தயாராகி உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணேசன், இந்த திராட்சை கொடியில் இருந்து 3 கிலோ கருப்பு திராட்சை பழத்தை முதன்முறையாக அறுவடை செய்தார். இப்போது 5 கிலோவுக்கும் அதிகமாக திராட்சை பழங்கள் காய்த்து அறுவடைக்கு தயராகியுள்ளது.
அனைத்து வகை செடிகளுக்கும் இயற்கை உரமிட்டால், காய்கறிகளையும் பழங்களையும் ராமேஸ்வரம் பகுதியிலேயே விளைவிக்கலாம் என்பதற்கு கணேசனின் முயற்சி ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும். கடல் சார்ந்த பகுதியில் விளைந்த திராட்சை கொடியை பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்வதுடன், திராட்சைக்கொடியின் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.