ஸ்ரீரங்கம் கோயிலில் முகக்கவசம் அணியாமல் தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதால் சர்ச்சை
Apr 22 2021 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முகக்கவசம் அணியாமல் சாமி தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று வருகை தந்த அவர், மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, கருடாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய சென்றபோது முகக்கவசத்தை சரியாக அணியாமல், தரிசனத்திற்காக உள்ளே சென்றார். அதன் பின்னர், முகக்கவசம் அணியாமலேயே, பேட்டரி கார் மூலம், தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார். கொரோனா பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், அமைச்சரே முகக்கவசம் அணியாமல் கோயிலில் வழிபாடு மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்களா? என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.