கோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு
Aug 4 2020 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும்-10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மார்க்கெட் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கோயம்பேடு சந்தை உள்பட தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து சந்தைகளையும் திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மார்க்கெட் மூடி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்கிரமராஜா தெரிவித்தார். சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவில்லை என கூறியுள்ள அவர், தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமழிசையில் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த மே 5-ம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், இதுவரை அதனை திறப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் வியாபாரிகள் போராட்டம் தொடரும் என்றும் திரு. விக்கிரமராஜா எச்சரித்தார்.