சென்னை சித்த மருத்துவ கொரோனா மையத்தில் சிகிச்சை பெற பலரும் ஆர்வம் - இதுவரை, 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்
Jul 11 2020 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் இதுவரை, 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நோயாளிகளுக்கு, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், சித்த மருத்துவர் வீரபாபு தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஆயிரத்து 224 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில், 832 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 392 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 271 ஆண்களும், 121 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை முதல் இன்று காலை வரை, 51 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.