தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் அடைப்பு : கிடங்குகளுக்கு மதுபான பாட்டில்கள் இடமாற்றம்
Apr 8 2020 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான பாட்டில்கள் பாதுகாப்பான கிடங்குகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான கிடங்குகளில் இடமாற்றம் செய்யப்பட்டன. அங்கு 24 மணிநேர கண்காணிப்பில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் நகரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானப் பாட்டில்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குடோனுக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றப்பட்டது. இதனையறிந்தது டாஸ்மாக் கடைகள் முன்பு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது. அவர்களை போலீசார் விரட்டினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் கொள்ளையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,
டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டத்திலுள்ள 53 டாஸ்மாக் கடைகளிலிருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, தனியார் மண்டபத்தில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு 24மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுரையில் டாஸ்மாக் கடையின்
பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மேலவாசலில் 2 நபர்கள் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக திடீர்நகர் காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், பெரியார் பேருந்து நிலையம் டி.பி.கே சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல், பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்கள் திருடப்பட்டன. எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.