தமிழகத்தில், காணும் பொங்கல் கொண்டாட்டம், வழக்கமான உற்சாகத்துடன் களைகட்டியது. முக்கிய சுற்றுலா தலங்களில் குடும்பம் குடும்பமாய் குவிந்த பொதுமக்கள், காணும் பொங்கலை, கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் விழாவின் நிறைவாக, காணும் பொங்கல், நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை போன்ற பகுதிகளில், நேற்று மதியம் முதல், மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால், மெரினாவில் மட்டும் 5 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்துவிடாமல் இருக்க, பெற்றோரின் தொலைபேசி எண்ணுடன் கூடிய "TAG" அணிவிக்கப்பட்டு, குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். பூங்காவில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பறக்கும் கேமராக்களைப் பயன்படுத்தி, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது, இதுவே முதல் முறை என, பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல், மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தந்துள்ள நிலையில், அவற்றை சுற்றுலா பயணிகள், ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பாரம்பரியமிக்க சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் என அனைத்து இடங்களிலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளின் வருகை, அதிகரித்துக் காணப்பட்டது. பிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு , தூண்பாறை , குணா குகை, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில், குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள், குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி, காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேனியில், வைகை அணைக்கு உறவினர்களுடன் படையெடுத்த பொதுமக்கள், காந்தி மண்டம், இசை நடன நீருற்று உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து, மனநிறைவுடன் காணும் பொங்கலை கொண்டாடியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.