தமிழகம் முழுவதும் மழைக்கால சீரமைப்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதி மற்றும் பாதிப்பட்டோருக்கு உணவுப்பொட்டலங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி, பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மழையால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளை மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் முடுக்கிவிட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் ஓடுவதை அமைச்சர் திரு. ப. மோகன் நேரில் பார்வையிட்டார். பின்னர், வெள்ள நீரை விரைந்து அகற்றி மக்களின் போக்குவரத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாதவச்சேரி, தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்ட அமைச்சர், கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட 38 பேருக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் நிதியுதவியினை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் திரு. சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். க. காமராஜ், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. அழகுவேல் பாபு, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் திரு. பி.தங்கமணி நேரில் பார்வையிட்டு, புனரமைப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். குமாரபாளையம், கபிலர்மலை, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வேளாண், வருவாய், நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் சென்று காவிரி கரையோரம் உள்ள நிலங்களில் ஏற்பட்ட பயிர்சேதம், கால்வாயம் சேதம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், இரவு பகல் பாராமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசிரி, வேட்டி, சேலை உள்ளிட்ட ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் திரு. பி.தங்கமணி வழங்கினார். பின்னர், நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சீரமைப்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் உரிய காலத்தில் செய்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. வி.தட்சிணாமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி.பி.பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை மாவட்டம் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜு, மாவட்ட ஆட்சியர் திரு. இல.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, திட்டப் பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். மதுரை மாடக்குளம் கண்மாய் பகுதி, கருப்பட்டி, இரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்ட அமைச்சர், காலதாமதம் செய்யாமல் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அய்யங்கோட்டையில் வீடு இடிந்து விழுந்து பலியான மாணவன் அஜித்குமாரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியான ருபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள புதியாதி கண்மாயில் ஏற்பட்ட கரை உடைப்பை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கண்மாய் கரையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோபால்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த துவார், கருப்பட்டி பட்டி, பிலாவிடுதி, கிருஷ்ணம்பட்டி, முத்தம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் திரு. N. சுப்பிரமணியன் பார்வையிட்டார். மேலும், மழையால் வீடு மற்றம் ஆடு, மாடுகளை இழந்த அப்பகுதி மக்களுக்கு நிதியுதவி மற்றும் வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.