மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், செல்வி ஜெயலலிதாவுக்கு பேராதரவு தெரிவிக்கும் வகையிலும் தமிழகமெங்கும் கழகத் தொண்டர்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செல்வி ஜெயலலிதா, பொய் வழக்கில் இருந்து மீண்டு, தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பது உறுதி என அவர்கள் சூளுரைத்துள்ளனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினையடுத்து, தமிழகமெங்கும் பொதுமக்கள் அமைதியான முறையில் அதே சமயம் மன உறுதியோடு அறவழி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தங்கள் முழு ஆதரவை தெரிவித்து இன்று அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் உணவகங்கள், பேக்கரி, டீக்கடைகள் ஆகியவற்றை தாங்களாக முன்வந்து அடைத்து, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதேபோல், சூளை, சுண்ணாம்பு ஓடை, வைரா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாய சலவை பட்டரைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
ஈரோடு அசோகா புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு துணி நூல் பதனிடும் ஆலை பணியாளர்கள், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தங்களின் பேராதரவை தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்டது அநீதி எனக் கூறி வகுப்புகளை புறக்கணித்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி, உப்பிலியாபுரம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துறையூர், திருவெறும்பூர், தேவராயநேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கருப்பு சட்டை அணிந்தபடி கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள், தாங்களாகவே முன்வந்து கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்றுமதி 2-ம் தர பின்னலாடை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு 600-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை தொழிலாளர்கள் ஒருநாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வடவல்லி பேருந்து நிலையம் அருகே அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. மலரவன் உட்பட 500-க்கும் மேற்பட்ட கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல், தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து அறவழிப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.