மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை, கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு மறுத்துள்ள செயல், நீதிக்கும், சட்டத்திற்கும் எதிரானது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என வழக்கறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனால், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த அநீதியைக் கண்டித்து வழக்கறிஞர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும், ஜாமீனில் விடுவிக்கக் கோரியும் செல்வி ஜெயலலிதா சார்பில், கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, செல்வி ஜெயலலிதா சார்பில், மூத்த வழக்கறிஞரும், அரசியல் சட்ட நிபுணருமான திரு. ராம்ஜெத்மலானி ஆஜரானார். எனினும் அரசுத் தரப்பில் ஆஜராக, கர்நாடக மாநில அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக தனக்கு உத்தரவு வரவில்லை என வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 6-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, ஜாமீன் மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுமானால், உயர்நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட மனு அடிப்படையில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அவசர மனுவாக ஏற்று, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. நீதிபதி ரத்னகலா இன்று இம்மனுவை விசாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி ரத்னகலா முன்பு, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. செல்வி ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞரும், அரசியல் சட்ட நிபுணருமான திரு.ராம்ஜெத்மலானி ஆஜரானார். நீதிபதி ரத்னகலா வந்து, 3 நிமிடங்கள் கழித்த பிறகு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் வந்தார். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை, வழக்கமான அமர்வே விசாரிக்கும் என்று நீதிபதி ரத்னகலா தெரிவித்தார். இதையடுத்து, செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு, தசரா விடுமுறைக்குப் பிறகு வரும் 7-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வின் செயல், நீதிக்கும், சட்டத்திற்கும் எதிரானது என வழக்கறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து வழக்கறிஞர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை, கர்நாடக அரசியல் ஆகியவற்றால் சிறைபிடிக்கப்பட்டிருந்த காவிரியை மீட்டெடுத்த மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தின் ஜீவாதார உரிமைக்காக, காவிரி பிரச்னையில், பல கட்ட சட்டப்போராட்டங்களை நடத்தி, நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டார். தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களின் ஒரே தலைவராக செல்வி ஜெயலலிதா விளங்கி வருகிறார். ஏழை எளிய மக்களின் துயர் துடைத்து, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி விளிம்பு நிலை மனிதர்களுக்கும் சென்றடைய நாளும் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரிக்கப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது உலகத் தமிழர்களின் உள்ளங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.