தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல்பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது - பணப்பட்டுவாடா மற்றும் வன்முறைகளை தடுக்க, முதன் முறையாக அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு - 24-ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Apr 22 2014 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வந்த அனல்பறக்கும் பிரச்சாரம், மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பணப்பட்டுவாடா மற்றும் வன்முறைகளை தடுக்க, தமிழகத்தில் முதன் முறையாக இன்று மாலை 6 மணி முதல் 24-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியான கடந்த 9-ம் தேதிக்கு பிறகு பிரச்சாரம் சூடுபிடித்தது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி 37 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்த நிலையில், கடந்த 19-ம் தேதி முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.பிரவீண்குமார் 6 மணிக்கு மேல் தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் மற்றும் தொலைபேசி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா மற்றும் வன்முறை நிகழாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் முதல் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை 6 மணி முதல் 24-ம் தேதி காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார். தேர்தல் பணியில் 3 லட்சம் பணியாளர்களும், பாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஒரு லட்சம் பேரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் திரு.பிரவீண்குமார் தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பான்கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி, தபால் நிலைய பாஸ் புத்தகம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் திரு.பிரவீண்குமார் தெரிவித்தார்.