உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்கள் வெற்றி - நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கும், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மனமார்ந்த நன்றி
Sep 23 2014 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து, கடந்த பல தேர்தல்களிலும், மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து சாதனை படைத்துவரும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலிலும், முழுமையான வெற்றிபெற்று, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார். மக்கள் நலனுக்காகவே அயராது உழைத்துக்கொண்டிருக்கும் தமது கரங்களை மென்மேலும் வலுப்படுத்தி, தமது நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள வாக்காளப் பெருமக்களுக்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர், நான்கு நகராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், நான்கு நகராட்சித் தலைவர்கள், ஆறு பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு கடந்த 18ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில், தமது தலைமையிலான அரசின் மூன்றாண்டு சாதனைத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் நிலை நிறுத்தி - தம்முடைய அன்பான வேண்டுகோளினை ஏற்று - அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்து, மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் தம்மை ஊக்கப்படுத்தி, தமது கரங்களை மேலும் வலுப்படுத்தி, நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய தமது அருமை வாக்காளப் பெருமக்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக, அல்லும் பகலும் அயராது அரும்பாடுபட்ட தமது உயிரினும் மேலான தமது அருமை கழக உடன்பிறப்புகளுக்கும், அமைச்சர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.