முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயனாளிகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 738 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும், 787 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் அமைச்சர் திரு. ஆர். காமராஜ் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 317 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ஆயிரத்து 268 ஆடுகள் வழங்கப்பட்டன.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21-வது வார்டு வரகனேரி பகுதியில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடையை அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார்.
நாகை மாவட்டம் பூம்புகாரில் காவேரி கடலுடன் கலக்கும் இடத்தில் 148 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்பிடி துறைமுக பணிகளை அமைச்சர் திரு. K.A. ஜெயபால் ஆய்வு மேற்கொண்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட நரிமுடுக்கு மற்றும் சின்னமேடு ஆகிய கிராமங்களில் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் டாக்டர். S. சுந்தரராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஏழை-எளிய மக்கள் பயனடையும் வகையில், 5 புதிய பேருந்து வழித்தடத்திற்கான பேருந்தினை அமைச்சர் திரு. S.S. கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏப்பம்பாளையம், சொட்டை, பொன்காளிவலசு உள்ளிட்ட கிராமங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் இக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலர் கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறை சார்பில், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் தொடங்கிவைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டது.
கரூர் நகராட்சியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் குடிநீர் திட்ட பணிகளை முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.