சென்னையில் விற்பனை பிரதிநிதிகள் போல் நடித்து, வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த தி.மு.க.வினர் : கையும் களவுமாக பிடிபட்டு, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
Apr 18 2014 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் விற்பனை பிரதிநிதிகள்போல் நடித்து, வாக்காளர்களுக்கு டிபன் பாக்ஸ்களில் பணம் வைத்து வினியோகம் செய்த 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களும், அக்கட்சியினரும் தோல்வி பயம் காரணமாக பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயல்களில் இறங்கியுள்ளனர். சென்னை தேனாம்பேட்டை தி.மு.க. அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் தி.மு.க.வினர், தங்களை விற்பனை பிரதிநிதிகள் போல் காட்டிக்கொண்டு டிபன் பாக்ஸ்களில் பணம் வைத்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர், பண வினியோகத்தில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை பிடித்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வாக்காளர்களுக்கு வினியோகப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ்களையும், அவற்றில் இருந்த ஏராளமான பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தி.மு.க.வினரின் இந்த தேர்தல் விதிமீறல் சம்பவம், தேனாம்பேட்டை பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.