தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஹாக்கி, ஸ்குவாஷ் உட்பட பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அறிவித்துள்ளதன் அடிப்படையில், தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் ஆகமொத்தம் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தென்கொரியாவின் Incheon நகரில் நடைபெற்ற 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்கள் குஷ் குமார், ஹரீந்தர் பால்சிங், சவ்ரவ் கோசல் மற்றும் தங்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில், தமது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வெள்ளிப் பதக்கம் வென்ற மகளிர் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனக்கா அலங்கமோனி, அபராஜிதா பாலமுருகன் ஆகியோருக்கும், மகளிர் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகள் ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், வர்ஷா கவுதம் மற்றும் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜீவ் ஆரோக்கியா ஆகியோருக்கும் தமிழக மக்கள் சார்பில், தமது இதயபூர்வமான வாழ்த்துகளை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கான பரிசுத்தொகையை, கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புரட்சித் தலைவி அம்மா, முறையே 50 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய், 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அதன் அடிப்படையில், தங்கப் பதக்கம் வென்ற 4 வீரர்கள் தலா 50 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகள் 4 பேர் தலா 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் 3 பேர் தலா 20 லட்சம் ரூபாயும் ஊக்கத் தொகை பெற தகுதி பெற்றுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர்-வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், தமது பாராட்டுகளை தெரிவித்துள்ள முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், எதிர்காலத்தில் நாட்டிற்காகவும், தமிழகத்திற்காகவும், அவர்கள், இதுபோன்ற மேலும் பல வெற்றிகளை பெறவேண்டும் என வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.