முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 50 பாதாளச் சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தற்போது அவை செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக சட்டப்பேரவையில் தகவல்
Jul 21 2014 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற 19 திட்டங்கள் உள்பட 50 பாதாளச் சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தற்போது அவை செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறை அலுவலகங்களை மக்கள் நாடி வந்த நிலை மாறி, மக்களைத் தேடி வருவாய்த்துறை என்ற அடிப்படையில் "அம்மா திட்டம்" மூலம் வருவாய் சான்றிதழ், பட்டா மாறுதல் உள்பட சுமார் 33 லட்சத்து 13 ஆயிரத்து 800 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று பாதாளச் சாக்கடை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு 20 பாதாள சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்துவிட்டு, தேர்தலுக்காக பல்லாவரம் நகராட்சியில் மட்டுமே திட்டத்தை தொடங்கி வைத்து அதனையும் நிறைவேற்றவில்லை என குறை கூறினார். ஆனால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், முந்தைய ஆட்சியில் நிறைவேற்றாமல் விடப்பட்ட திட்டங்களுடன் 50 பாதாள சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்றி அவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வருவாய் வட்டங்களை பிரிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வருவாய்துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதும் நிர்வாக வசதிக்காக, 34 வருவாய் வட்டங்கள் பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களை அதிகாரிகளே மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று "அம்மா திட்ட முகாம்கள்" மூலம் வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் திரு. P. தங்கமணி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், ராஜபாளையம் அருகே 3,450 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பாலங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று, 3 ஆண்டுகளில் 642 கோடி ரூபாய் செலவில் சிறுபாலங்கள் உள்பட 950 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.