திருச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கியப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு
Jul 30 2014 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கியப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பிற மாவட்ட வளாகங்களில் அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், 23 மாவட்டங்களில் இயங்கி வரும் 25 நீச்சல் குளங்கள் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து புதுப்பிக்கப்படும் எனவும், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, பேரவை விதி 110-ன் கீழ், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களமாக விளங்கும் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை அருகில் உள்ள மேலக்கோட்டையூரில், 125 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்கல்விக்கான தனி பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் பயன்பாட்டிற்காக, 18 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக அறை, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருமித்த அணுகுமுறையை வழங்கும் வகையிலும், தேசிய வளர்ச்சியில் அவர்கள் முழுமையாக பங்காற்றும் வகையிலும், மாநிலத்திற்கென ஓர் இளைஞர் கொள்கை வகுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.