தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. பாதுகாப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
16-வது மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், ஆலந்தூர் சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் 875 பேர் போட்டியிடுகின்றனர். ஆலந்தூர் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக தேர்தல் நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை காலை 6 மணி வரை நீடிக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆயிரத்து 663 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான திருமதி.அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டார்.
ஈரோடு தொகுதிக்குட்பட்ட ஆயிரத்து 447 வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழுர் மற்றும் கெடமலை வாக்குச்சாவடி மையங்கள் மலை பகுதியில் அமைந்துள்ளன. கரடுமுரடான மலைப்பகுதிக்குச் செல்ல வடுகம் கிராமத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன.
நீலகிரி தொகுதியில் உள்ள ஆயிரத்து 425 வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் மட்டுமின்றி இதர பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. 17 மண்டல முகாம்கள் மூலமாக இப்பணி நடைபெற்று வரும் நிலையில், பதற்றமான 38 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் முடிவடைந்துள்ளன. பாதுகாப்புடன் மின்னணு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் 135 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான திரு.முனுசாமி பார்வையிட்டார்.
இதனிடையே, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் மட்டுமின்றி போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீரர்களின் கொடி அணிவகுப்புப் பேரணியும் நடைபெற்றது.
மதுரை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் வரை பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படவிருப்பதாக ஆட்சியர் திரு.இல.சுப்பிரமணியன் தெரிவித்தார். இன்றும் நாளையும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள 2 ஆயிரத்து 319 வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆயிரத்து 567 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 300 பேரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மட்டுமின்றி மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மஹாராஷ்ட்ராவில் 19 தொகுதிகள், ராஜஸ்தானில் 4, உத்தரப்பிரதேசத்தில் 12, சத்தீஸ்கர், பீகாரில் தலா 7 தொகுதிகள் என மொத்தம் 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.