நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும், தொடர்ந்து விமர்சனம் செய்வதாக கருணாநிதி, ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் - தி.மு.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல்
Apr 23 2014 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான திரு. செல்வகுமார், திரு. திருமாறன், திரு. திவாகர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இம்மனுவை தாக்கல் செய்தனர். தி.மு.க. தலைவரான கருணாநிதியும், பொருளாளர் பொறுப்பில் இருக்கும் மு.க. ஸ்டாலினும், அண்மைக் காலமாக நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்தும், அவதூறு பேசியும் வருவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக, அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சதாசிவம் தெரிவித்த ஒரு கருத்து பற்றி, அவரை கருணாநிதி தரம் தாழ்த்தி விமர்சித்ததாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மு.க. ஸ்டாலினும் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அவதூறாக பேசி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கருணாநிதியும், ஸ்டாலினும் சார்ந்துள்ள தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரும் இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.