மாநகராட்சி ஆணையர் மீது தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் புகார் : குடியரசு தலைவர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் மனு
Jul 22 2021 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆய்வுக்கு வந்த தன்னை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாக, மதுரை மாநகராட்சி ஆணையர் மீது, குடியரசு தலைவர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் புகார் அளித்துள்ளார்.
தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் திரு.வெங்கடேசன், கடந்த 12-ம் தேதி மதுரை மாநகராட்சிக்கு ஆய்வுக்கு வந்தபோது, மாநகராட்சி வளாகத்திற்குள் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், தன் முன்பாகவே பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், குறைகளை நேரில் கேட்க வேண்டுமென அதிகாரிகளிடம் தெரிவித்தார். என்றாலும் அங்கு தாமதமாக வந்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக, குடியரசு தலைவர், மத்திய அமைச்சர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழக ஆளுநர், முதல்வர், தலைமை செயலாளர் ஆகிய 6 பேரிடம், வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விஜய் சம்பலாவை சந்தித்து அவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ஆய்வுக்கு வந்த தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் மாநாகராட்சி ஆணையர் நடந்து கொண்டதாகவும், மத்திய அமைச்சர் அந்தஸ்தில் உள்ள தன்னிடம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடந்து கொண்ட விதம் முறையல்ல என்றும், மக்களின் குறைகளை கேட்க அழைப்பு விடுத்தும் நேரில் வர மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.