உக்ரைன் விமானம் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு, ஈரான் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் எச்சரிக்கை
Jan 12 2020 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் விமானம் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு, ஈரான் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில், தவறுதலாக, உக்ரைன் நாட்டின் சர்வதேச ஏர்லைனர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான், கடைசியில் செய்த தவறை ஒப்புக்கொண்டது.
இந்த விமான விபத்து தொடர்பாக, கனடா அரசின் உதவியை, உக்ரைன் நாடியுள்ளது. பொதுவாக, விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை, கனடா அரசு தான் அதிகமாக நடத்தும். ஏனெனில், அந்நாட்டு அரசிடம்தான் நவீன தொழில்நுட்பப் பிரிவினர் உள்ளனர். அதனால், கனடா அரசிடம் உக்ரைன் உதவி கேட்டுள்ளது. மேலும், பலியானவர்களில், 63 பேர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். இதை, பெரிய பிரச்சனையாகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் அணுக துவங்கியுள்ளார்.
இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் அளித்த பேட்டியில், உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் தாக்கி அழித்தது கண்டனத்திற்குரியது என்றும், இதில், கனடா மக்கள் 63 பேர் பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், உயிரிழப்பு குறித்து ஈரான் பதிலளித்தே ஆக வேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் ஆதாரங்கள் வெளியாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கையால், ஈரான் - கனடா இடையே, பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.