இலங்கையின் புதிய அதிபர் யார்? - பலத்த பாதுகாப்புக்கிடையே நாளை வாக்குப்பதிவு
Nov 15 2019 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி முடிவடைகிறது. இலங்கையை பொறுத்தவரை, நவம்பர் - டிசம்பர் மாதங்களில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இதன்படி, அந்நாட்டின் 8-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே, பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன், சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில், 35 பேர் போட்டியிட்டாலும், கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில், கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், நாளை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.