ஜப்பானை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மும்முரம்
Oct 14 2019 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கிழக்காசிய நாடான ஜப்பானில், சில தினங்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அண்மையில், தலைநகர் டோக்கியோவின் தென்மேற்குப் பகுதியை, ஹகிபிஸ் புயல் தாக்கியது.
அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கன மழை பெய்தது. இதனால், வீடுகளின் மேற்கூரைகள், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. முன்னெச்சரிக்கையாக குடியிருப்புகளில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
புயல் மற்றும் கன மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின் சே அபே, காவல் துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், கடலோரப் பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் என, மொத்தம் 27 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.