பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலியானதால் பதற்றம்
Jul 3 2019 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபரை விமான நிலைய போலீசார் மடக்கி பிடித்தனர்.
லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை, மர்ம நபர் ஒருவர், திடீரென பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனால் விமானத்திற்கு காத்திருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து, துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், விமான நிலையத்துக்கு டாக்சியில் வந்துள்ளார். துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் எப்படி உள்ளே நுழைய முடிந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்பு குளறுபடிகளே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.