அணுஆயுத விவகாரம் எதிரொலி - ஈரான் மீது மிகக்கடுமையான பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா
Nov 5 2018 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை அமெரிக்க விதித்துள்ளது.
ஈரான் தனது அணுஆயுத திட்டத்தை கைவிட முன் வராததை அடுத்து, அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப் படுவதாகவும், 4-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். இதை எதிர்த்து நேற்று தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். இந்தப்பேரணி டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டதன் 29-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதனிடையே தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட இன்றும், நாளையும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள், இதுவரை விதித்ததிலேயே கடுமையான தடைகள் என தெரிவித்தார்.
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, தென் கொரியா துருக்கி என தங்களின் கூட்டணி நாடுகளை டிரம்ப் நிர்வாகம் தடையிலிருந்து விலக்கியுள்ளது.