பாகிஸ்தானில் வாக்குச் சாவடி அருகே நடத்தப்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் - 30 பேர் உடல்சிதறி உயிரிழந்ததால் நாடு முழுவதும் பெரும் பதற்றம்
Jul 25 2018 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பலுசிஸ்தானின் குவெட்டா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் 5 ஆண்டுக்கால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாக வேண்டும். எனவே, 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.
பாகிஸ்தானில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் வன்முறை அதிகரிக்கலாம் என்பதால், ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. எனவே, 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், பலுசிஸ்தானின் குவெட்டா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அந்நாட்டு மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.