யூதர்களுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய சட்டம் : இஸ்ரேல் நாடாளுமன்றம் அனுமதி
Jul 20 2018 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு மட்டுமே வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேலில், யூத மதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட யூத தேச சட்ட மசோதா மீதான விவாதம், கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. இந்தச் சட்டம், அரேபிய இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த, யூதர்களுக்குச் சொந்தமான அமைப்புகளுக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் அளிப்பது போன்ற கடுமையான பிரிவுகளுக்கு, அதிபர் ரூவென் ரிவ்லின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடும் சர்ச்சைக்குரிய அம்சங்கள் மட்டும் நீக்கப்பட்டு, திருத்தியமைக்கப்பட்ட அந்த மசோதா, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தமுள்ள 120 உறுப்பினர்களில் 62 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமை யூதர்களுக்கு மட்டுமே உள்ளது. மேலும், ஹூப்ரு மொழி மட்டுமே இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக இருக்கும். அரபி மொழிக்கு இதுவரை இருந்து வந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, சிறப்பு அந்தஸ்து மட்டும் அந்த மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு இஸ்ரேலிய எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டம், அரேபியர்களை இரண்டாம்நிலை குடிமக்களாக தனிமைப்படுத்தும் மதவாதச் சட்டம் என்று விமர்சித்துள்ளனர்.